18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

மூலத்தின் அறிகுறிகள். எப்படி அதனை கண்டுபிடிப்பது

நாம் குரங்கிலிருந்து மனிதனாக நிமிர்ந்து நடக்க பழகி பரிணாம வளர்ச்சிக்கு உள்ளானதன் விளைவாக நமக்கு கிடைத்த பரிசு “மூலம்” எனலாம். நமது முந்தைய கட்டுரையில் மூலம் எப்படி ஏற்படுகிறது, அதன் காரணிகள் என்ன என்று பார்த்தோம். உள்மூலத்தின் அறிகுறிகளையும், வெளிமூலத்தின் அறிகுறிகளையும் இங்கே காண்போம்.

 

உள்மூலத்தின் அறிகுறிகள்

  • மலம் கழிக்கும் போது, வலி இல்லாத ரத்தப்போக்கில் தான் முன்னரே இருந்த மூலம் முதன்முதலில் இப்போது தெரிய வருகிறது. உங்கள் மலத்தில் ரத்தம் சிறிது கலந்திருப்பதை பார்க்க முடியும். இந்த ரத்தம் வடிதல் என்பது கட்டுப்பாடு இல்லாத ரத்தப்போக்காக அமையாது. ஒரு மாதிரி கலந்தாற்போல இருக்கும். அவ்வளவுதான். தெளிவாக சொல்லவேண்டும் என்றால், ரத்தப்புள்ளிகளை உங்கள் மலத்தில் காண நேரிடலாம். ஒன்றிரண்டு சொட்டுகளாகக் கூட ரத்தம் மலத்தில் கலந்து இருக்கும்.
  • அடுத்த கட்டமாக மலம் கழிக்க முக்கும்போது, மலம் கழிக்க தொடங்கும்போதோ, முடிக்கும்போதோ, வலியில்லாமல் சொட்டு சொட்டாக ரத்தப் போக்கு இருக்கலாம். பொதுவாக மக்கள் இதனை உடல் சூட்டோடு தொடர்பு படுத்தி சொல்வார்கள் (body heat). இப்படி சொல்வது ஏனென்றால், இத்தகைய அறிகுறிகள் பொதுவாக வெய்யில் காலங்களிலோ, கோழிக்கறி சாப்பிட்ட பிறகோ ஏற்படுவதால் இதனை அதனோடு தொடர்பு படுத்துவார்கள். வெய்யில் காலங்களிலும், கோழிக்கறி போன்ற உணவுகளும் மலச்சிக்கலை அதிகரிப்பதனால் இந்த ரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது. உடல் சூட்டிற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த ரத்தப்போக்கு நாலைந்து நாட்களில் தானாகவே நின்று விடும்.
  • அடுத்த கட்டமாக, உள்மூலம் வளரும்போது, ஆசனவாயில் ஒரு உருண்டையான அமைப்பு இருப்பதை உணரமுடியும். அந்த உருண்டைகள் ரத்த நாளங்களின் தொகுப்பு எனலாம். அந்த உருண்டையை உங்கள் ஆசனவையின் உள்ளே தள்ளமுடியும்.
  • அந்த ரத்த நாள உருண்டை நாளடைவில் அளவில் பெரிதாகும். அப்போது உள்ளே தள்ளும்போது, அவைகள் மாட்டிக்கொள்ள நேரிடும். அவ்வாறு மாட்டிக்கொண்டால் அவை வீங்கிவிடும். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் நிலைக்கு இந்த கட்டம் மாறியிருக்கும்.

வெளிமூலத்தின் அறிகுறிகள்

  • ஆசனவாயின் வெளிப்பகுதியில் ஒரு உருண்டையான அமைப்பில் மூலம் இருக்கும். அவை வலி மிகுந்தே காணப்படும். மலம் கழிக்கும்போது நிறைய வலியை தரக்கூடியதாக இருக்கும். கட்டி வெளியே வருவதால் ஆசனவாய் புண் ஏற்பட்டு அதனால் வலி ஏற்படுகிறது.
  • இந்த உருண்டையான அமைப்புகளின் ரணம் ஆற ஆற, அவை மேலும் அளவில் பெருக வாய்ப்பு அதிகம். இது மேலும் வலியை ஏற்படுத்தலாம்.
  • வெளிமூலம் உள்ள ஒருவர், சாதாரணமாக அமரும்போதோ, மலம் கழிக்க கழிவறையில் அமரும்போதோ மிகுந்த வலியை உணர முடியும்.

மூலத்தை கண்டுபிடிப்பது எப்படி

  • வயிற்றுக்கூறு அறுவை சிகிச்சை மருத்துவரால் (Gastric Surgeon) மட்டுமே மூலத்தையும் அதன் வீரியத்தையும் துல்லியமாக கண்டுபிடிக்க இயலும். முதலில், அறுவை சிகிச்சை மருத்துவர், நோயாளியை நிறைய கேள்வி கேட்பார்.
  • பிறகு கட்டாயம் உங்கள் ஆசனவாய் பகுதியை அறுவை சிகிச்சை நிபுணர் பரிசோதனை செய்து பார்ப்பார். பரிசோதனையில், மருத்துவர் ஒரு கையுறையை அணிந்து உங்கள் ஆசனவாய் பகுதியை இளக்கி, அதன் உள்ளே அவரின் ஒரு விரலை செலுத்தி மூலக்கட்டிகள் இருக்கிறதா என்று உணர்ந்து பார்ப்பார். இந்த உணருதல் தான் முதல் படி. என்னடா அறுவை சிகிச்சை மருத்துவர் அந்த இடத்தில் விரலை உள்ளே செலுத்துகிறாரே என்ற எண்ணமெல்லாம் ஏற்பட்டு நாம் நெளியக்கூடாது. அது சிறப்பான ஒரு நோய் கண்டுபிடிப்பு முறை என்பதை மறுக்கக்கூடாது.
  • கண்டிப்பாக அடுத்து பிராக்டோஸ்கோப் என்ற சிறிய குழாய் வடிவ கருவியை உங்கள் ஆசனவாய் பகுதியில் செலுத்தி மூலம் இருக்கிறதா என்று மருத்துவர் பார்ப்பார். இந்த பிராக்டோஸ்கோப் கருவியை செலுத்திப் பார்ப்பதன் வாயிலாக, மூலம் எந்த அளவிற்கு (Grade of Piles) இருக்கிறது என்று கணிக்க இயலும். அதுமட்டுமல்ல, மூலம் தவிர்த்து வேறு ஏதேனும் மருத்துவ பிரச்சனைகளான ஆசனவாய் புண்(fissure), புற்றுநோய் கட்டிகள் (tumor), போன்றவை உள்ளனவா என்றும் கண்டுபிடிக்கலாம்.
  • ஒரு அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே மூலத்தை சரியாக கணித்து, தேவையான மருத்துவத்தை கொடுக்க முடியும்.

 

Call Now